சிறு உழவர்கள் அல்லது பெரு உழவர்கள் இன்று மரம் வளர்க்கும் சிந்தனையில் இறங்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறார்கள். தேக்கு மரம் நடுவதால் நீண்ட காலத்தில் நன்மை அதிகம் என்று பலர் தேக்கு மரம் பயிர் செய்ய முன்வந்துள்ளனர். நமது தன்னம்பிக்கை வாசகர்களில் உள்ள இளம் உழவர் நண்பர்கள் நடைமுறையில் பயன்தரக்கூடியவ பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. மேலும் விவரம் வேண்டுவோர் இநக கட்டுரை ஆசிரியரை அணுகலாம்.

(ஆசிரியர் குழு)

தேக்கு மரம் எல்லா பூமியிலும் வளரும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. அதே சமயம் தண்ணீர் அதிகம் பாய்ச்சினால் மிக நன்றாக வளரும். ஆனால் தணீர் தேங்கி நிற்கும் இடத்தில் வளராது.

ஆடி மாதத்திலிருந்து கார்த்திகை மாதம் வரை நடுவது சிறந்த காலமாகும். மழைக்காலமாக இருப்பதால் நன்கு வளரும். பின்பு வெய்யில் காலத்தில் 10-15 நாட்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்சினால்கூடப் போதுமானது.

தேக்குச் சாகுபடியில் தேக்கு விதையை மேட்டுப் பாத்தி அமைத்து அதில் விதையைத் தெளித்து தினமும் 2 முறை தண்ணீர் தெளித்து வளர்க்க வேண்டும். 8 மாதம் வளர்ந்த பின்புதான் அதை வேருடன் பிடுங்கி மேல் வெட்டிவிட்டு அடிப்பகுதியை (வேர்ப்பகுதி) தேக்கு மரம் பயிர் செய்யும் பூமியில் நடவேண்டும். இதைத்தான் தேக்கு பதியங்கள் என்று சொல்லுகிறோம்.

இந்தத் தேக்கு நாற்றுப் பதியங்களை நேரடியாக பூமியில் நடலாம். அல்லது அதையே பாலிதீன் பையில் போட்டு வளர்த்த பின்பும் நடலாம். (எங்களிடம் இரண்டும் உள்ளன. விதையும் உள்ளது).

ஏக்கருக்கு 4000 செடி நடலாம். (1 மீட்டர் 1X மீட்டர்) 5 வருடத்துக்குப் பிறகு 3700 மரங்கள் வெட்டுக்கு வரும். குறைந்த பட்சம் மரம் ரூ. 50க்கு விற்றாலும் 1, 85,000 ரூபாய் கிடைக்கும். வேறு எந்த விவசாயத்திலும் இவ்வளவு வருமானம் கிடைப்பதில்லை. இதை ஆடு, மாடுகள் கடிப்பதில்லை. அவைகளை உள்ளேயே மேயவிடலாம். பூச்சி நோய் பாதிப்பதில்லை.

எனது பண்ணையில் 2 வருட மரம் 2000மும் ஒரு வருட மரம் 5000 மும் உள்ளன. பூமியை நன்கு புழுதிபட உழுது தண்ணீர் பாய்ச்ச வசதியாக பாத்தி பிடித்துக் கொள்ளவேண்டும். தேக்கு நாற்றுப் பதியங்களை (கிழங்கு) 1 மீட்டர் X மீட்டர் இடைவெளியில் வரிசை வரிசையாக நடவேண்டும். நீளமான கயிற்றில் 1 மீட்டர் தூரத்தில் குறிப்போட்டுக்கொண்டு அந்தக்குறி உள்ள இடத்தில் சிறிய கடப்பாரையில் நிலத்தில் குத்த வேண்டும் அந்தக் குழியில் தேக்குக் கிழங்குகளை வேர்ப்பாகம் அடியிலும், செடிப்பாகம் மேலாகவும் இருக்கும் படியாக பூமி மட்டத்திற்கு மேல் 1/2 அங்குலம் தெரியும் படியும் ஊன்ற வேடும். அந்தக் குழியில் காற்று இல்லாமல் நன்கு அழுத்திவிட வேண்டும்.

மேற்படி கிழங்கை நடுவதற்கு முன்பு பி.எச்.ச 1 சதம் தூளை கிழங்கின் மேல் தூவி நட்டால் கரையான் பாதிப்பைத் தடுக்கலாம். நட்டவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இதில் ஊடுபயிராக வெங்காயம், சோயா, உளுந்து, தக்காளி இவைகள் நடலாம். களை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு வருடம் ஆனால் நிழல் கட்டிக்கொள்வதால் களை வளராது. பக்கக்கீளைகளை ஒடித்து மரம் நேராக வளரும்படி பார்த்துக்கொள்ளவும்.

கன்று நட்ட போது வாரம் ஒரு தண்ணீரும் மரம் வளர 15-20 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சினால் போதுமானது.

தேக்குமரத்தின் அடி இலைகளை நோய் தாக்கும். அதே சமயம் குருத்து பாதிப்பதில்லை. எனவே பயிர்ப் பாதுகாப்பு தேவையில்லை. 5-6 ஆண்டுகளுக்குப் பின் மரத்தைக் கலைத்து விட வேண்டும். 10, 15, 20, 25 ஆண்டுகளில் இது நடைபெறுகிறது. கலப்பின் போது ஒன்றுவிட்டு ஒன்று எதிர் கோண வரிசையில் உள்ள மரங்கள் அகற்றப்பட வேண்டும்.

தேக்கு சாகுபடியில் நன்கு கவனிக்கப்பட வேண்டியது. நல்ல தரமான முதிர்ந்த மரத்திலிருந்து எடுத்த விதை மூலம் உற்பத்தி செய்வதும் கட்டைவிரல் பருமன் உள்ள முதிர்ந்த நாற்றுக்களை நடவு செய்வதும் ஆகும்.
-
சி. ஆறுமுகம்
ராக்கிய கவுண்டன் புதூர் பாசூர் – 638154